சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளதால் நகைவாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடனேயே காணப்படுகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என 2 முறை உயர்வை சந்தித்தது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,480க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கம் அடைய செய்துள்ளது. தொடர்ந்து, 3ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.
அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640க்கு விற்பனையானது. நேற்று முன்தினமும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720 ஆகவும் விற்றது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,040க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.114க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.