சின்னஞ்சிறு வயதில் யோகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று அசத்திவருகிறார் பதிமூன்றே வயதான தமிழினி. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாவது படித்துவரும் தமிழினி தான் இவ்வளவு சாம்பியன் பட்டத்தை வென்று பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறார். ஏழாவது படித்துக்கொண்டே உலக அளவில் நடைபெறும் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளி வருகிறார் சிறுமி தமிழினி. கலந்து கொண்டுள்ள போட்டிகள் பலவற்றிலும் பெரும்பாலும் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார் தமிழினி என்பது கூடுதல் சிறப்பு. உலக ஆன்லைன் யோகா சாம்பியன்ஷிப்பில் ‘‘யோகா இளவரசி” என்ற பட்டத்தை பெற்றுள்ள தமிழினி யோகா கலை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
நீங்கள் யோகா பயிற்சியை ஆரம்பித்தது எப்போது?
கடந்த எழு வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய ஆறாவது வயதிலேயே யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டேன். சிறு வயதில் ஏற்பட்ட வீசிங் பிரச்னை காரணமாக மருத்துவரின் அறிவுரைப்படியே யோகாவினை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். சாதாரணமாக நான் ஆரம்பித்த இந்த யோகா பயணம், பிறகு அதில் நான் காட்டும் அதீத ஈடுபாடுகளை கண்டு எனது யோகா குரு விஜய மோகன் ராவ் அவர்கள் என்னை பல்வேறு போட்டிகளுக்காக தயார் படுத்தினார். தற்போது உலக அளவிலான பல்வேறு யோகாசன போட்டியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளேன். மேலும் யோகா போட்டிகளுக்கான பல்வேறு வயதிற்கான பிரிவில் கலந்து கொண்டு பரிசினை வென்று வருகிறேன் .
வாங்கிய விருதுகள் மற்றும் கௌரவங்கள் குறித்து ….
நான் இதுவரை 120 மெடல்களையும் பரிசுகள் மற்றும் விருதுகளையும் வாங்கியுள்ளேன்.புதுவையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான யோகா திருவிழாவில் 9 முதல் 14 வயதினருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி அவர்களிடமிருந்து முதல் பரிசுக்கான கோல்ட் மெடலை வாங்கினேன். அதேபோன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன். மேலும் யோகா இளவரசி, யோகா நட்சத்திரா, தங்கத் தாரகை போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறேன்இந்திய யோகா ஃபெடரேஷன் நடத்திய 72வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓப்பன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழ்நாடு மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய போட்டியில் ஓவர்ஆல் சாம்பியனாக வந்திருக்கிறேன் தென்னிந்திய யோகா சாப்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது. தமிழ்நாடு அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.
நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டத்தையும் யோகா நட்சத்திர விருதினையும் பெற்றுள்ளேன். ஆசியப் போட்டிகளில் பங்கு பெற்று சௌத் இந்தியாவில் நடந்த போட்டிகளில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தினை ஆறு முறை வாங்கி இருக்கிறேன். மேலும் அதே போட்டிகளில் பங்கு பெற்று ஆறு முறை ரன்னராகவும் வந்திருக்கிறேன். ஆசியா அளவிலான யோகா போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சாம்பியன் ஆஃப் சாம்பியன் வென்றேன். இந்தியன் ஹத்தா யோகா பெடரேஷன் நடத்திய விர்சுவல் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனையாளராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
இன்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் நடத்திய போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன். தற்போது வரை தமிழக மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பரிசை பலமுறை வென்றதோடு, ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பலமுறை வென்றுள்ளேன். பல்வேறு அரசியல் தலைவர்களிடமும், பிரபலங்களிடமிருந்தும் நேரிடையான பாராட்டுதல்களை பெற்றிருக்கிறேன்.
உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து…
எனக்கு யோகாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் யோகா பயிற்சிக்கென யோகா பள்ளியை ஏற்படுத்தி பலருக்கும் யோகாவின் பயன்கள் குறித்து சொல்லித் தரவேண்டும். என் வீசிங் பிரச்சினை சரியானதை போல பலரின் ஆரோக்கியம் குறித்த விஷயங்களுக்கு யோகா கலை நல்ல பலனை தருமென நம்புகிறேன். அதற்காக யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்தியா சார்பாக பல்வேறு உலகப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இன்னும் நிறைய விருதுகளை வாங்க வேண்டும். சிறந்த யோகா ஆசிரியராக வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. அதற்கு எனது அப்பா, அம்மா மற்றும் எனது குடும்பமும் மிகுந்த உறுதுணையாக இருக்கிறது. எனது தந்தை ரஜினியும் ஒரு விளையாட்டு வீரர் தான் என்பது எனது விளையாட்டு ஆர்வத்திற்கு கூடுதல் பலம். எனது யோகா குருவும் நான் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற தகுந்த பயிற்சியும் ,அறிவுரையும் தருவதோடு என்னை சிறந்த வழியில் ஊக்கப்படுத்தியும் வருகிறார். இவர்களின் ஆசியுடன் மேலும் பல மெடல்களையும் வாங்க வேண்டும் என்பதே எனது தற்போதைய லட்சியம் என்கிறார் சிறுமி தமிழினி.
– தனுஜா ஜெயராமன்