*பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி : வடகிழக்கு பருவமழை முடியும் வரை பொதுமக்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் சார்பில் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற பயிற்சி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் சரயு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பு குழுக்கள் மூலம் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் ஒத்திகை பயிற்சியை பார்வையிட்டார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஏற்படும் மின்வெட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை பொக்லைன் மூலம் அகற்றுதல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மீட்பு குழு மூலம் துரிதமாக மேற்கொள்ளப்படும். பொக்லைன் மூலம் மரக்கிளைகளை அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் படகுகள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவதானப்பட்டி படகு இல்லத்தில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள், நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், மழை க்காலங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கவச உடை அணிவித்து மீட்கப்படுவது, சாலை விபத்து நடைபெறும் போது, இடிபாடுகளில் சிக்கியவர்களை நவீன கருவிகளை கொண்டு இரும்பை உடைத்து மீட்பு பணிகள் மேற்கொள்வது, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வரும் போது அவற்றை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பது, பேரிடர் காலங்களில் சுய பாதுகாப்பு றேம்கொள்வது, வீடுகளில் தாழிட்டு கொண்டவர்களை மீட்பது போன்ற பணிகள் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் முன்பு செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் நீர்நிலைகள் கடந்து செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர்கள் சக்திவேல், பழனி, தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.