Wednesday, June 25, 2025
Home செய்திகள்Showinpage கன்னிவாடி, குண்டடம் சந்தைகளில் பக்ரீத் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கன்னிவாடி, குண்டடம் சந்தைகளில் பக்ரீத் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Arun Kumar

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ளது கன்னிவாடி. தமிழக அளவில் புகழ்பெற்ற இந்த ஆட்டுச்சந்தைக்கு வாரம்தோறும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் விற்பனைக்கு வருவது வழக்கம். இதன்மூலம், ஒரு கோடி முதல் 2 கோடி வரை வாரச்சந்தை நாட்களில் வியாபார பரிவர்த்தனை இங்கு நடைபெறுவதும் வழக்கம்.

7ம் தேதி சனிக்கிழமை இன்று இஸ்லாமிய மக்களால் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்றும் இதை அடுத்த மூன்று நாட்களுக்கும் ஆட்டுக் கிடாய்களை வாங்கி மதச்சடங்குகளை நிறைவேற்றுவது வழக்கம். பக்ரீத் பண்டிகை மற்றும் கோயில் திருவிழாக்கள் போன்ற பண்டிகை காலங்களில் ஆடுகளின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

பொதுவாக மற்ற மாவட்டங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் செம்மண், கரிசல் மண், காடுகளில் வளர்கப்படுகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர், கன்னிவாடி, குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள் அனைத்தும் சுண்ணாம்பு கற்கள் நிறைந்த கால்சியம் சத்துகள் அதிகம் உள்ள விவசாய காடுகளில் வளர்க்கப்படுவதால் இதில் வளரும் தீவனங்களை உண்டு வளரும் ஆடுகள் இயற்கையாகவே கொழுப்புச் சத்துடன் கால்சியம் சத்து நிறைந்ததாகவும், புரதச்சத்து அதிகரித்ததாகவும் இருப்பதால் இப்பகுதியில் இருந்து விலைக்கு வாங்கப்படும் ஆடுகளின் இறைச்சிக்கு இறைச்சி பிரியர்கள் இடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கன்னிவாடி, குண்டடம், மூலனூர் ஆட்டுச் சந்தைகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வதும், பதப்படுத்தப்பட்ட இதன் இறைச்சிகள் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதும், இதன் சுவையான இறைச்சிக்காகவும் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ள காரணத்திற்காகவும் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை கன்னிவாடி ஆட்டுச் சந்தைக்கு வழக்கமான அளவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான இறைச்சிக்கான ஆட்டுக்கிடாய்களுடன் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிகபட்சம் 30 கிலோ எடை கொண்ட முறுக்கிய கொம்புகளைக் கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் வியாழக்கிழமையே கன்னிவாடி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு பொழுது விடிவதற்குள் பக்ரீத் பண்டிகைக்கான கொழுத்த ஆட்டுக்கிடாய்கள் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு முடிவடைந்தது. வழக்கமாக விற்பனைக்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்த உயிருள்ள 8 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்றின் விலை ரூ.8000, 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

எதிர்பார்த்தபடி அதிக எடை கொண்ட ஆட்டுக்கிடாய்கள் அனைத்தும் வியாழக்கிழமை நள்ளிரவே விற்பனையாகி முடிந்ததால் இஸ்லாமியர்கள் பண்டிகையான பக்ரீத் பண்டிகைக்கு நன்கு புஷ்டியான ஆரோக்கியமான கொழுத்த ஆடுகளை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டினர். ஆனால் பக்ரீத் பண்டிகைக்கு தகுதியான ஆடுகள் கிடைக்காவிட்டாலும் ஓரளவு கொழுத்த ஆடுகள் 8 கிலோ எடை கொண்ட ஆடுகளே 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை கூறப்பட்டதால் விலை அதிகமாக இருப்பதாக கூறி ஆடுகளை வாங்கி செல்வதில் பலரும் தயக்கம் காட்டினர். இருப்பினும் பண்டிகைக்கான இந்த வார ஆட்டுச் சந்தையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு விற்பனை ஆகி உள்ளது என விவசாயிகளும் இடைத்தரகர்களும் தகவல் கூறினர்.

இதேபோல் நேற்று அதிகாலை நடைபெற்ற குண்டடம் ஆட்டுச் சந்தையிலும் ஆடுகளின் வரத்து வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. சந்தையிலும் 8 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்றின் விலை ரூ.8000 முதல் 10 ஆயிரம் வரை விலை கூறப்பட்டதாலும் ஆடுகளை வாங்கி சடங்குகளை நிறைவேற்ற வேண்டிய கடமையின் காரணமாக அதிக விலை கொடுத்தும் பலர் வாங்கிச் சென்றனர்.

இது குறித்து கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் கந்தசாமி பாளையம் விவசாயி பழனிச்சாமி கூறியதாவது: வழக்கமாக கன்னிவாடி ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகமாகவே இருக்கும். ஆனால் தற்போது அண்மையில் பெய்த மழை காரணமாக மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளுக்கு தேவையான புல் பூண்டுகள் அபரிமிதமான அளவில் வளர்ந்துள்ளது. தொடர் மழை பெய்து இருந்தால் ஆடுகளுக்கு மழைக்கால நோய்கள் ஏற்பட்டு எடை குறைவு ஏற்படுவதுடன் ஆடுகளை வளர்ப்பதில் பல்வேறு கஷ்ட நஷ்டங்களும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் தேவையான அளவு மிதமான மழை பொழிந்ததாலும் கால்நடை துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் மழைக்கால நோய்கள் எதுவும் ஆடுகளை பாதிக்கவில்லை. இதனால் ஆடுகள் வளர்ப்பதில் எங்களுக்கு சிரமங்கள் ஏற்படவில்லை. தேவையான தீவனமும் தற்காலிகமாக சிரமமின்றி கிடைப்பதால் தற்போது குறைந்த விலைக்கு ஆடுகளை விற்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாகவே ஆடுகளின் விலையும் கூடுதலாகி போனது. நேற்றைய பக்ரீத் பண்டிகை சந்தையில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க வந்த தாராபுரத்தை சேர்ந்த ஜாபர் அலி கூறியதாவது: குறைந்த விலைக்கு ஆடுகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளின் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சில மோசடி வியாபாரிகள் சமூக வலைத்தளங்களில் 75 கிலோ முதல் 80 கிலோ வரை எடை கொண்ட ஆடுகளை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு தருகிறோம். பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் தேவைப்படுவோர் முன் பணமாக 15 ஆயிரம் ரூபாய் வாட்ஸ் அப் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட முகவரிக்கு நேரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்வதாக மோசடி விளம்பரங்களை செய்து வருகின்றனர். இதனை நம்பி பணம் அனுப்பிய பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக இதே போன்ற மோசடிகள் பல இடங்களில் நடைபெற்றது. இதற்கான புகார்களும் பல்வேறு இடங்களில் விடுபட்டுள்ளதாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நூதன மோசடி குறித்து இஸ்லாமியர்களின் ஜமாத்துகளில் எச்சரிக்கை அறிவிப்பும் கொடுத்துள்ளனர். எனவே பண்டிகைக்கு தேவையான ஆடுகளின் விலை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தாலும் நேரடியாக விவசாய தோட்டங்களுக்கு சென்று தகுதியான ஆட்டுக்கிடாய்களை நேரில் பார்வையிட்டு தகுந்த விலை கொடுத்து வாங்கி சென்றால் இந்த ஏமாற்றத்தை தவிர்க்கலாம். வெள்ளிக்கிழமை சந்தை கூடுவதற்கு முன்பே கன்னிவாடி சந்தையில் பக்ரீத் பண்டிகைக்கான ஆட்டுக்கிடாய்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi