Thursday, May 15, 2025
Home செய்திகள்Showinpage தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது போன்று தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு: மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது போன்று தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு: மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

by Francis

சென்னை: தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மே 1ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று பெரியார் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

1932-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தவர்தான் பெரியார். ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகமாம் தமிழகத்திற்கு திரும்பிய பெரியார் , “இனி அனைவரையும் தோழர்கள் என்று அழைக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.” மே நாளைத் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாடவேண்டும் என்று சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. எட்டு மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது.

அதற்கும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார். 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே 1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கொண்டு வந்தார். அதற்கு பிறகு பொறுப்பேற்ற கலைஞர் அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அவ்வளவு ஏன்? சென்னையில் மே தின பூங்காவை மட்டும் அல்ல, அதில் உள்ளே நினைவுச் சின்னத்தையும் ஏற்படுத்தித் தந்தவர் தலைவர் கலைஞர் தான் என்பதை பெருமையோடு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இதன் மூலமாக, தொழிலாளர்களும் வளர்ந்து வருகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எந்த முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும், அப்போது நான் முதன்முதலாக கேட்பது என்னவென்றால், எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள் என்று நான் முதல் கேள்வியை கேட்பதுண்டு. வேலை தருபவர் – பணியாளர் ஆகியோர் இடையிலான உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்த வேண்டும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்காக, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம், கொள்கையாக வைத்து இலக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்!

இன்னும் ஒரு வார காலத்தில், திராவிட மாடல் ஆட்சி உருவாகி, நான்காவது ஆண்டை நிறைவு செய்து, 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். எனவே, மே தினம் கொண்டாடக்கூடிய இங்கே இருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi