சென்னை: ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரன் வீடு, அண்ணா பல்கலை வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2022-24ம் ஆண்டு காலகட்டத்தில் பள்ளிக்கரணையில் உள்ள வில்லாக்களை குறிவைத்து ஞானசேகரன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு நீலாங்கரை, கானத்தூர் பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடித்து சிறை சென்றது தெரியவந்தது. இதை மறைக்கவே, பிரியாணி கடை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
3 நாள் சிறப்பு காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை ஆலந்தூரில் பழைய நகைகளை வாங்கி விற்கும் குணால் சேட் என்பவரிடம் விற்று பணம் பெற்று அந்தபணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக ஞானசேகரன் கூறினார். இதையடுத்து நகை வியாபாரியிடம் இருந்து 120 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஞானசேகரனிடம் இருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், ஞானசேகரனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து பள்ளிகரணை போலீசார் திருட்டு நகைகளை வாங்கிய குணால் சேட்டை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.