பீஜிங்: ”ஜி 20 கூட்டறிக்கை உலகளாவிய சவால்களைச் சமாளிக்க, பொருளாதாரத்தை மீட்கும் ஆக்கபூர்வமான அறிகுறிகளை காட்டுகிறது,” என்று சீனா தெரிவித்துள்ளது. ஜி 20 உச்சி மாநாடு கடந்த 9, 10 தேதிகளில் டெல்லியில் நடந்தது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பதிலாக பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார். ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த முக்கிய கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஜி 20 உறுப்பு நாடுகளின் ஒருமித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டறிக்கை குறித்து சீனத் தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், “ஜி 20 உச்சிமாநாட்டில் சீனாவின் முன்மொழிவுகள் ஏற்கப்பட்டிருப்பது நல்ல அறிகுறியாகும்,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதில் ஜி 20 நாடுகள் ஒருங்கிணைவதை சீனா வரவேற்கிறது. இது பொருளாதார மீட்சி குறித்து உலகிற்கு ஒரு ஆக்கபூர்வமான அறிகுறியை காட்டுகிறது. இந்த கூட்டறிக்கையை தயாரிக்கும் போது, சீனாவும் ஆக்கபூர்வமாக பங்களித்தது. ஜி 20 குழுவுக்கு சீனா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் பணிகளை ஆதரிக்கிறது,” என்று கூறினார்.