சென்னை: முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம், அரியலூர், கடலூர், பண்ருட்டி, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட முந்திரி பயிர் மூலம் கிடைக்கக்கூடிய மகசூல் கிடைக்காமல் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, முந்திரி பயிர் மூலம் கிடைக்கும் மகசூல் கிடைக்க முடியாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளின் இழப்பை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு, விவசாயிகள் பயிர் செய்யும் போது ஒவ்வொரு பருவகாலப் பயிர் குறித்து, பருவகாலம் தொடங்கும் முன்பே ஆலோசனை வழங்கி வேளாண்தொழிலையும், விவசாயிகள், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.