விழுப்புரம்: விழுப்புரம் அருகே அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி மகன் ஜெயஜெமினி(28). கடந்த 2020 மார்ச் 16ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அச்சிறுமியை ஜெயஜெமினி கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு அழுதுகொண்டே வந்த சிறுமி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயஜெமினி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹெர்மிஸ் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயஜெமினிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்கிடவும் உத்தரவிட்டார்.