ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்துண்டு அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு மேற்புறம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு வார்டு அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலை ஒட்டி வளர்ந்திருந்த அபாயகர மரம் கடந்த வாரங்களுக்கு முன்பு வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட ராட்சத மரத்துண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கு செல்லும் நடைபாதையின் குறுக்காக விழுந்துள்ளது.
இம்மரத்துண்டை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக கிடக்கும் மரத்துண்டினை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.