Tuesday, June 24, 2025
Home செய்திகள்Showinpage செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் வேதியியலில் 251 பேர் சென்டம்; பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு: தேர்வுத்துறை விசாரணை?

செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் வேதியியலில் 251 பேர் சென்டம்; பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு: தேர்வுத்துறை விசாரணை?

by MuthuKumar

விழுப்புரம்: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேரும், அங்குள்ள அல்ஹிலால் தனியார் பள்ளியில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தகவல் குறித்து தேர்வுத்துறை விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படிதான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் செஞ்சி வட்டார பள்ளிகளில் வேதியியல் தேர்வு நடைபெற்ற அன்று பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் குழந்தையராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் வினாத்தாள் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்வு மையங்களுக்கும் ெகாண்டு செல்லப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் படிப்புதிறனை சோதித்து பாடவாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்தியதால் அதிகளவு தேர்ச்சியும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெறமுடிந்தது. மற்றபடி வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை’ என்று கூறினார்.

செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi