டேராடூன்: அட்சய திருதியை நாளான நேற்று கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு சார்தாம் யாத்திரை தொடங்கியது. உத்தராகண்டில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் யாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
அட்சய திருதியை நாளான கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நுழைவாயில்கள் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேற்று இரு கோயில்களுக்கும் சென்று அனைவரின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தார். யமுனோத்ரியில் முதல்வர் தாமி கூறுகையில்,‘‘சார்தாம் யாத்திரை எங்களுக்கு ஒரு பெரிய திருவிழா ஆகும்.
யாத்ரீகர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை,’’ என்று தெரிவித்தார். கேதார்நாத்,பத்ரிநாத் கோயில்கள் முறையே நாளை(மே2) மற்றும் மே 4ம் தேதிகளில் திறக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்காக 6,000 போலீசார், 17 கம்பெனி மாநில ஆயுதபடை போலீசார் மற்றும் 10 கம்பெனிகள் அடங்கிய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.இந்த ஆண்டு யாத்திரைக்காக 22 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.