Sunday, July 20, 2025
Home செய்திகள்குற்றம் இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று கள்ளக்காதலனுடன் சேர்ப்பதாக ரூ.10.50 லட்சம் பறித்த கும்பல்

இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று கள்ளக்காதலனுடன் சேர்ப்பதாக ரூ.10.50 லட்சம் பறித்த கும்பல்

by Arun Kumar

கோவை: கள்ளக்காதலனுடன் சேர்ப்பதாக இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று ரூ.10.50 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணிற்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்ேறாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணமான வாலிபர் ஒருவருடன் அந்த இளம்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த வாலிபர் நாளடைவில் இளம்பெண்ணுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டார். ஆனால் இளம்பெண் அவரை பிரிய முடியாமல் தவித்துள்ளார்.

அப்போது அந்த இளம்பெண்ணுக்கு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (28), ஆறுமுகம், சதீஷ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் இளம்பெண்ணிடம், ‘‘காதலனிடம் பேசி சேர்த்து வைக்கிறோம். 20 லட்ச ரூபாய் தந்தால் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க தேவையான ஏற்பாடு செய்கிறோம்’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து இளம்பெண், முதல் கட்டமாக 10.50 லட்ச ரூபாய் தருவதாகவும், காதலன் வந்தால் மீதமுள்ள பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இளம்பெண் பணத்துடன் சேரன் நகர் பஸ் ஸ்டாப்புக்கு சென்றார். அங்கே கார்த்தி உட்பட 3 பேரும் காரில் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணை காரில் ஏற்றி மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு அழைத்து சென்றனர்.

கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது 3 பேரும் இளம்பெண்ணிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர், ‘‘என் காதலன் வந்தால்தான் பணம் தருவேன்’’ எனக்கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10.50 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் இருந்து அவரை இறக்கிவிட்டு தப்பினர். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின்படி கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi