சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அவ்வாறு பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படும் சிலைகள் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்கலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், ஊர்வலங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக 18,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைக்கும் போது யாரும் தண்ணீரில் இழுத்துச் செல்லாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.