மாமல்லபுரம்: ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள ஐடிசி தனியார் ஓட்டலில் 27, 28 ஆகிய இரு நாட்கள் ஜி20 சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம் நடந்தது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகள் மற்றும் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த அமைச்சர்கள் என 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், சுற்றுச்சூழல் சம்பந்தமான பல்வேறு நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், 2 நாட்கள் சுற்றுச்சூழல் பணிக்குழுக்கூட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதில், பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் 107 பேர் நேற்று இரவு 4 பஸ்களில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மாமல்லபுரம் கடற்கரை கோயில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் வரவேற்று புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அழைத்து சென்றார். தொடர்ந்து, அவர்கள் மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த கடற்கரை கோயில், சுற்றிப்பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் செல்போனில் எடுத்தனர். அப்போது, சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு பிரநிதிகளுக்கு கடற்கரை கோயில் எந்த காலத்தில், எந்த மன்னரால் செதுக்கப்பட்டது. தற்போது, எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து தெளிவாக விளக்கிக் கூறினர். முன்னதாக, தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் மேள, தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இவர்கள் வருகையொட்டி மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில், மாமல்லபுரம் முக்கிய வீதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.