நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…
கால புருஷனுக்கு இருபத்தி ஐந்தாவது நட்சத்திரம் (25)
பூரட்டாதி நட்சத்திரமாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு கொழுங்கோல், நாழி, புரட்டை ஆகியவனவாகும்.
இது ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இதில் மூன்று பாதங்கள் கும்பத்திலும் ஒரு பாதம் மீனத்திலும் உள்ளது. இதனை சமஸ்கிருதத்தில் ‘பூர்வப்ரோஷ்டபதா’ என்று அழைக்கப்படுகிறது. இரு குருவின்
நட்சத்திரமாகும். கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும் பொழுது ஏற்படும் பௌர்ணமிக்கு ப்ரோஷ்டபதி ஆகும். இதுவே புரட்டாசி என்றழைக்கப்படுகிறது. இந்த பெயர் ப்ரோஷ்டபதா என்ற பெயரிலிருந்துவருகிறது.
பூரட்டாதி அதிதேவதை புராணம்
கர்ணன், கின்னரன் மற்றும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக இந்த பூரட்டாதி உள்ளது. கின்னரன் என்பவர்கள் வித்தியாசமான உருவம் கொண்டவர்கள். இவர்கள் இடுப்பிற்கு கிழே பறவை போன்ற ரூபமும் இடுப்பிற்கு மேலே மனித ரூபமும் கொண்டவர்கள். இது போன்றவர்கள் இப்போது இருப்பது மிகவும் அரிதான ஒன்று. இவர்கள் பற்றிய அடையாளங்கள் வேறு மதத்திலும் பின்பற்றப்படுகிறது. இவர்கள் தேவ தூதர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதில் வல்லவர்கள். வானில் கானம் பாடும் கந்தர்வர்கள் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற தன்மையுடையவர்கள் கலி காலத்தில் இருப்பது கடினம். இந்த இனம் அழிவு நிலைக்குச் சென்றிருக்கும் அல்லது மறைந்து வாழும் அமைப்பை உடையவர்கள். கர்ணன் குந்திதேவியின் மகன். பாண்டவர்களுக்கு மூத்தவன். குந்திதேவிக்கு தெய்வங்களை அழைக்கும் மந்திரங்களை துர்வாச முனிவரால் அருளப்படுகிறது. அவ்வாறு அருளிய மந்திரத்தை பரிட்சித்து குந்தி தேவி சிறுவயதில் பார்க்கிறாள், அந்த மந்திரத்தை பயன்படுத்தி சூரியனை அழைக்கிறாள். சூரியனின் அருளால் சிறுவயதில் கர்ணனை பெற்றெடுக்கிறாள். அச்சமயத்தில் செய்வதறியாது ஆற்றில் விட்டுவிடுகிறாள்.புலஸ்திய முனிவரின் மகனான விச்ரவசுவிற்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். மூத்த மனைவியான இலதேவிக்கு மகனாக வைஸ்ரவணன் பிறந்தான். இளைய மனைவியான கைகேசிக்கு மகனாக பிறந்தவன்தான் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை.
இலங்காபுரி என்று சொல்லும் இலங்கையை முதலில் வைஸ்ரவன்தான் ஆண்டு வந்தான். ராவணன் தவமிருந்து சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்று வைஸ்ரவனை தோற்கடித்து இலங்கையைக் கைப்பற்றினார். எல்லாவற்றையும் இழந்த வைஸ்ரவன் தவம் மேற்கொள்வதற்காக அலைந்து திரிந்தான். ஆனால், தாய் – தந்தையர் திருமணத்திற்காக முயற்சிக்கவே எந்த பெண்ணையும் ஏற்கவில்லை. தானே பெண் தேடிக்கொள்கிறேன் என்ற நோக்கத்தில் அலைந்து திரிந்த வைஸ்ரவன் காசி மாநகருக்கு வருகிறான். அந்த மாநகரின் அழகைக்கண்டு வியக்கிறான். விஸ்வநாதரின் தரிசனம் கண்ட குபேரன் அங்கேயே தங்கிவிடுகிறான். வந்த நோக்கத்தை மறந்து சிவ தியானத்தில் ஆழ்ந்து விடுகிறான். அவ்வாறு தியானித்த வைஸ்ரவன் பல நூறாண்டுகளாக தவத்தில் இருக்கிறான். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத வைஸ்ரவனை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தனர். காலங்கள் உருண்டோடுகின்றன. எண்ணூறு ஆண்டுகளை கடந்து தவம் மேற்கொள்கிறார். தேவர்களின் தவத்தையே மிஞ்சிவிடுகிறது வைஸ்ரவனின் தவம். வைஸ்ரவன் தவத்தால் சிவபெருமானின் சித்தத்தில் அடியாரின் தவம் அடியாரை நோக்கி இழுக்கிறது. தன்னை நோக்கித்தவம் செய்யும் அடியவனை காண வேண்டும் ஆவல் கொள்கிறார் சிவபெருமான். அவ்வாறு ஆவல் கொண்டு சிவபெருமான் – பார்வதி தேவியுடன் பிரதட்சணமாக வைஸ்ரவனை கண்டு ஆச்சர்யமடைகின்றனர். அம்மை – அப்பனும் அழைக்கவே தவத்திலிருந்து விடுபட்டு அம்மையப்பனை மெய்யுருக தரிசித்து ஆச்சர்யமடைகிறான் வைஸ்ரவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவத்தின் காரணத்தால் அழகாபுரி என்னும் பட்டணத்தை உருவாக்கி தருவதோடு மட்டுமின்றி எல்லா நதிகளையும் அவரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவாராக்கிறார். மேலும், செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக ‘குபேரன்’ என்ற பட்டம் சூட்டி அமரச் செய்து. சித்திரரேகை எனும் மங்கையை குபேரனுக்கு மண முடித்து சிவபெருமான் ஆசிர்வதிக்கிறார். சிவபெருமானின் பிரியமானவராக குபேரன் மாறினார் என்பதே பூரட்டாதி நடத்திரஅதிதேவதையின் புராணம்.
பொதுப்பலன்கள்
சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். கடவுள் பக்தி உடையவர்கள். தர்மத்தை பின்பற்றும் நபர்களாக இருப்பர். அடுத்தவர்களுக்காக இரக்க மனம் கொண்டவர்களாக இருப்பர். தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் வல்லவர்களாக இருப்பர். முன்னோர்களின் சொற்களை மதிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.முன்கோபி, ஆனால் நல்லவர்கள்.
ஆரோக்கியம்
சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்கள். ஆதலால், எல்லா வேலைகளையும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆகவே, பரபரப்பு அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளதா? என பார்த்துக்கொள்ள வேண்டும். உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
பூரட்டாதிக்குரிய வேதை நட்சத்திரம்…
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். உத்திரம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.
பரிகாரம்
மாமரம் கன்றை பூரட்டாதி நட்சத்திரத்தன்று கோயில்களில் நட்டுவைப்பது நன்மை தரும். குபேரன் இருக்கும் ஸ்தலங்களுக்கு சென்று சிவபெருமானையும் குபேரனையும் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பான நற்பலன்களை கொடுக்கும்.
கலாவதி