Sunday, December 10, 2023
Home » தரையில் ஊர்வதை விட்டு தலையை தூக்கி பாருங்கள் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது: அதிமுக ஆட்சியில் மாநில உரிமை பாஜவிடம் அடகு வைக்கப்பட்டது

தரையில் ஊர்வதை விட்டு தலையை தூக்கி பாருங்கள் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது: அதிமுக ஆட்சியில் மாநில உரிமை பாஜவிடம் அடகு வைக்கப்பட்டது

by Dhanush Kumar

* எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: ‘‘எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள். தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பாஜவிடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க, அந்தத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர். நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும். அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ‘பச்சைப் பொய்யர்’ பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அதிமுக. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். யாரு? பொய்ச்சாமி, மன்னிக்கவும் பழனிசாமி பேசுகிறார்.

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? விடியல் பயணம் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம்? புதுமை பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா? லட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ’நான் முதல்வன் திட்டம்’ அ.தி.மு.க. திட்டமா? நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி – இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா? 2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இது அ.தி.மு.க. திட்டமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? இது பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக இருக்கிறாரே பழனிசாமி அவரின் ஆட்சியில் நடந்ததா? ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே. தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல. அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது. இதுதான் வரலாறு.

போதைப் பொருளான குட்கா விற்க லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டிற்கே ரெய்டு வந்ததை மறைக்க முடியுமா? சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காக்கை குருவிகளை சுடுவது போல 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்களே பழனிசாமி, உங்கள் முகத்திரைதான் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் அப்பட்டமாகக் கிழிந்து தொங்கியதே. மறந்துவிட்டீர்களா? பொள்ளாச்சி பாலியல் கொடுமை நெஞ்சில் ஈரம் இருக்கும் எல்லோரையும் கதற வைத்தது. ஆனால் பழனிசாமி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார். பாஜ கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த தி.மு.க.வினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார், பா.ஜ. விற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். பா.ஜ.வை விமர்சிக்காமலேயே பாஜவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம். இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும். திராவிட மாடல் கோட்பாடானது இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால் – உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும். மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்திற்கு இந்த திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும். நிறைவாக, தீபம் தெரிவதைப் போல – இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க, இந்தியா கூட்டணி வெல்க, நாற்பதும் நமதே, நாடும் நமதே.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?