பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப்போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் யுலியா ஆன்டோனோவ்னா புடின்சேவா உடன் மோதினார்.
துவக்கம் முதல் புலிப்பாய்ச்சலுடன் ஆடிய மிர்ரா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வொன்ட்ரொஸோவா மோதினர். இதில் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற ஜெஸிகா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.