பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரோலண்ட் கேரோஸ் ஸ்டேடியத்தில், கடந்த மே 19ம் தேதி முதல் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா (27), சீன வீராங்கனை க்வின் ஸெங் (22) உடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் நேர்த்தியாக ஆடியதால் டை பிரேக்கர் வரை சென்றது. கடைசியில் அந்த செட் சபலென்கா வசம் வந்தது. அடுத்த செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய சபலென்கா எளிதில் அதை கைப்பற்றினார். அதனால், 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சபலென்கா அரை இறுதிக்கு முன்னேறினார்.
* அமெரிக்க வீரர்கள் அபாரம்
ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று அமெரிக்க வீரர்கள் இவான் கிங், கிறிஸ்டியன் ஹேரிசன் இணை, பின்லாந்து வீரர் ஹேரி ஹெலியோவரா, பிரிட்டன் வீரர் ஹென்றி பேட்டன் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் அலட்டிக்கொள்ளாமல் ஆடிய அமெரிக்க இணை, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலி வீராங்கனைகள் சாரா எர்ரானி, ஜாஸ்மின் பவுலோனி இணை, பெல்ஜியம் வீராங்கனை எலிஸெ மெர்டென்ஸ், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவா இணையுடன் மோதியது. துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனைகள் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தனர்.
* ஆடவர் பிரிவில் லக்சயா தோல்வி
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் ஷி யு கி உடன் மோதினார். இப்போட்டியின் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இருப்பினும், 3வது செட்டை சுதாரித்து ஆடிய சீன வீரர் வசப்படுத்தினார். அதனால், 21-11, 20-22, 21-15 என்ற செட் கணக்கில் ஷி யு கி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி, ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்தது.