செய்யூர்: முருக்கம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் முதியோருக்கு இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மதுராந்தகம் அடுத்துள்ள முருக்கம்பாக்கம் கிராமத்தில் சென்னை ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கற்பக விநாயகர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ முகாமினை நேற்று நடத்தினர்.
இதில் முதியோர் நல, பொது நல, குழந்தைகள் நல, கண் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு கிராம பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளித்து இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இம்முகாமில் குறிப்பாக முதியோருக்கு ஏற்படக்கூடிய டிமென்ஷியா (ஞாபகம் மறதி) நோய்க்கு சிகிச்சை அளித்தனர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் கிளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், முருக்கம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.