திருமலை: திருமலைக்கு வெளியூர்களில் இருந்து வரும் ஆந்திர அரசு பஸ்கள் ஒருமுறை திருமலையில் இலவசமாக இயங்கும் திட்டத்தை தேவஸ்தான அதிகாரி தொடங்கி வைத்தார். திருமலையில் கோயில், தங்குமிடம், அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ‘ஸ்ரீவாரி தர்ம ரதம்’ என்ற பெயரில் 10 இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருமலை முழுவதும் சுற்றி வரும் வகையில் ஆந்திர மாநில அரசு (ஏபிஎஸ்ஆர்டிசி) பஸ்களில் இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து திருமலைக்கு வரும் இந்த அரசு பஸ்கள் திருமலையில் ஒருமுறை இலவசமாக இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்டி இந்த சேவை நேற்று தொடங்கப்பட்டது. கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்திரி தலைமை தாங்கி இலவச பஸ் பயணத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: திருமலையில் பக்தர்களிடமிருந்து தனியார் டாக்சி வாகனங்கள் வசூலிக்கும் அதிக கட்டணத்தை நிறுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி.க்கு கோரிக்கை விடுத்தோம். அவர்களும் சம்மதித்து பஸ்களை இலவசமாக இயக்க முன்வந்துள்ளனர். இந்த பஸ்கள் திருமலையில் உள்ள வாரி தர்ம ரதங்களைப் போலவே இயங்கும். பக்தர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலவசமாக ஏற்றிச் செல்லப்படும். இந்த இலவச பயணங்கள் பக்தர்களுக்கு கூடுதல் நன்மை தரும்.
திருமலையில் வாரி தர்ம ரதங்கள் மூலம் ஏற்கனவே தினமும் 300 நடைகளை இயக்கி வருகிறோம். பேருந்துகள் கூடுதலாக வருவதால், கூடுதலாக 80 நடைகளை இயக்க முடியும். ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் பஸ்கள் பயன்பாட்டிற்கும் வரும் என்பதால் பொது போக்குவரத்து அமைப்பு வலுப்படுத்தப்படும். கட்டணம் இல்லாமல் இச்சேவைகளை பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். திருமலையிலிருந்து திருப்பதிக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.