தமிழக சட்டப்பேரவையில் நேற்று மத்திய பதிவுச் சட்டம்-1908-ன் சில பிரிவுகளை தமிழகத்திற்கு ஏற்றபடி திருத்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி நேற்று அறிமுகம் செய்தார். இதன்படி, அசையாச் சொத்து தொடர்பான ஒரு ஆவணம் எந்தப் பதிவு அலுவலரிடம் பதிவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ, அது சமர்ப்பிக்கப்படும் தேதிக்கு முன்பு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்தின் வில்லங்கச் சான்றிதழுடன் இணைத்து, சொத்தின் முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்காவிட்டால் அதை பதிவு அலுவலர் பதிவு செய்யக்கூடாது. சொத்தின்மீது அடமானம் தொடர்பான வில்லங்கம் இருக்கும்போது, அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாவிட்டால், அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது.
சொத்தின் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்படவில்லை என்றால், அந்த ஒப்பந்தத்தின் நிவாரணத்திற்கான உரிமை வழக்கை தாக்கல் செய்வதற்கான கால வரையறை முடியாத சூழ்நிலையில் அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது. மூதாதையர் சொத்தாக இருந்து, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நேர்வில், அந்தச் சொத்து தொடர்பாக வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்படாவிட்டால், அதை பதிவு செய்யக் கூடாது. முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போய்விட்டால் அதற்கான அறிவிப்பை உள்ளூர் நாளிதழில் வெளியிட்டு, அந்த விளம்பரத்துடன் சேர்த்து காவல் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டாலும் அதை பதிவு செய்யக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.