திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவருக்கு கடந்த மார்ச் மாதம் 22:ந் தேதி வாட்ஸ்:அப் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு வாட்ஸ்:அப் மூலமாக ஒரு நபர் பேசினார். அவர் மூளை புற்று நோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள் இமாச்சல பிரதேசத்தில் இருந்து தாங்கள் வாங்கி விற்பதாகவும், அதில் முதலீடு செய்தால் கமிஷன் தொகையாக அதிகப்படியான பணத்தை தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய சிவகுமார் பணத்தை அவர்களின் வங்கி கணக்கு செலுத்தியுள்ளார். மொத்தம் ரூ.98 லட்சத்து 28 ஆயிரத்தை கொடுத்த பிறகு அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து சிவகுமார் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்தை முடக்கினர்.குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மும்பை, டெல்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக உமேஷ் ரமேஷ் விதாந்தே என்பவரை மும்பையில் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஓசே போஹின் லாரன்ஸ் என்பவரையும், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணான நசபா சரோம் என்பவரையும், மேற்கு டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குமார் மிஸ்ரா என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், இரண்டு மடிக்கணினிகள், மோடம், ஏ.டி.எம். கார்டுகள், 2 பாஸ்போர்ட்டுகள், ரூ. 28 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் திருப்பூர் ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.