பரோடா: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் (71) உடல் நிலைக் குறைவு காரணமாக காலமானார். ரத்த புற்றுநோயால் 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த கெய்க்வாட் முதலில் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பரோடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.
மும்பையில் பிறந்த கெய்க்வாட் 1974-1987 வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடினார். 40 டெஸ்டில் 1985 ரன் (அதிகம் 201, சராசரி 30.07, சதம் 2, அரை சதம் 10) மற்றும் 15 ஒருநாள் போட்டியில் 269 ரன் (அதிகம் 78*, சராசரி 20.69) எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 11 மணி, 11 நிமிடங்கள் களத்தில் நின்று 201 ரன் விளாசி உள்ளார். ஓய்வுக்கு பிறகு 2 முறை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.