Tuesday, June 24, 2025
Home செய்திகள் மாஜி போலீஸ்காரரிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி மலராத கட்சியின் புது தலைவருக்கு அட்வைஸ் தரப்படுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மாஜி போலீஸ்காரரிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி மலராத கட்சியின் புது தலைவருக்கு அட்வைஸ் தரப்படுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by MuthuKumar

‘‘புதிய மாவட்ட தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் மலராத கட்சி நிர்வாகிங்க, கட்சி தலைமைக்கு புகார்களை தட்டிவிடுறாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட மலராத கட்சியில், மாஜி போலீஸ்காரரால் புதிய மாவட்ட நிர்வாகியான கடைசி மூவேந்தர் பெயருடன் துவங்குபவர் நியமிக்கப்பட்டார். இவர் கட்சிப்பணிகளில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்று புகார் ஓங்கி ஒலிக்கிறதாம்.. ஏற்கனவே கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றிய பலரை புறக்கணித்து விட்டு, கட்சிக்கு புதியவரான இவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டதாம்.. இதனால், ஒட்டுமொத்த கட்சியினரும் மூவேந்தருக்கு எதிராக கிளம்பி இருக்காங்களாம்.. கட்சிப்பணிகளில் ரொம்பவே மந்தமா இருக்கிறாராம்.. புதியவரை மாற்ற வேண்டுமென தற்போதைய தலைமைக்கு புகார்களை தட்டி விட்டுக்கிட்டு இருக்காங்களாம்.. தனக்கு எதிராக நிர்வாகிகள் அணி திரள்வதற்கு, சர்ச்சை பேச்சு புகழ் மாஜி தேசிய செயலாளர் தான் காரணம் என மூவேந்தர் தரப்பினர் பதிலுக்கு குற்றம் சாட்டுறாங்களாம்.. இது ஒரு புறமிருக்க, இவருக்கு முன் இருந்த நிர்வாகி தரப்பினர், மூவேந்தர் கூட்டும் கூட்டத்திற்கு ஆட்கள் யாரும் அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொள்கின்றனராம்.. இதனால், நகர மற்றும் ஒன்றிய அளவிலான கட்சி கூட்டங்களை நடத்த முடியாமல் மூவேந்தர் தரப்பு தவிக்கிறதாம்.. இதனால், ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் கட்சி செயல்பாடின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியினரே பேச ஆரம்பித்து விட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் நெருங்குவதால் போஸ்டர்களில் எல்லாம் தனது படத்தை மட்டுமே போட்டு விளம்பரம் தேடும் நியமனக்காரர் மீது கொந்தளிப்பில் இருக்காங்களாமே விசுவாசிகள் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யூனியன் பகுதியான புதுச்சேரியில் அரசியல் பிரபலங்களை சந்திப்பது சகஜமாம்.. கட்சி, ெகாடிகளை மறந்து அந்தளவு பிணைப்பில் இருப்பார்களாம்.. தற்போதைய புல்லட்சாமி அரசில் 3 பிரதிநிதிகள் டெல்லி பவர்புல் மூலம் நியமனமாக வந்தார்களாம்.. அதில் ஒருவரான அசோக முத்திரையானவர் கட்சியிலும் தொகுதியிலும் தனித்துவமாக உலாவுகிறாராம். தேர்தல் நெருங்குவதால் தொகுதியில் நலத்திட்ட பணிகள் துவக்க நிகழ்வுக்காக போஸ்டர் அடித்து விளம்பரம் தேடுகிறாராம்.. அதில் தனது படத்தை மட்டுமே போடுகிறாராம்.. கட்சிக்காக பாடுபடும் தங்களைத்தான் மறந்து விடுகிறாரு… ஆனா பண்டு கொடுக்கிற டெல்லி, மாநில பவர்வுல் தலைகளை கூடவா.. என்ற முணுமுணுப்பு தாமரைக்குள் எழுந்துள்ளதாம். கடந்த 2021ல் அத்தனை தொண்டர்களும் பேட்டையில் உழைத்த உழைப்பின் பரிசுதான் அவருக்கு கிடைத்த நியமனமே என கொந்தளிக்கும் கட்சி விசுவாசிகள், மனமில்லாதவரின் தனிப் பாதைக்கு காலம்தான் பதில் சொல்லும் என விரக்தியை வெளிப்படுத்துறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி போலீஸ்காரர் எதிர்காலத்தில் பெரும் சிக்கல் ஏற்படுத்தி விடாமல் இருக்க அலர்ட்டா இருக்கும்படி புதிய தலைவருக்கு ரெண்டாங்கட்ட தலைவர்கள் யோசனை சொல்லி இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரரின், பதவி பறிக்கப்பட்டதால் நிம்மதியை இழந்து இரவு தூக்கமில்லாமல் தவிக்கிறாராம்.. எதையாவது சொல்லி மீண்டும் பழைய இடத்திற்கே வந்திடலாமுன்னு இரவு பகலா திட்டம் தீட்டிக்கிட்டிருக்காராம்.. புதுத்தலைவரை பின்னுக்கு தள்ளியாக வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்காராம்.. இதையெல்லாம் தெரிந்து கொண்ட அல்வா நகரத்துக்காரர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்காராம்.. தலைவரான நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என சொல்லிட்டாராம்.. அதையெல்லாம் மாஜி போலீஸ்காரர் காதில் போட்டுக்கொள்வதில்லையாம்.. புதிய தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தான் ஒரு புலனாய்வு புலி என்பதை காட்டிக்கொள்வதற்காக தீர்ப்புக்கூறப்பட்ட அண்ணா பல்லைக்கழக மாணவி வழக்கை கையில் எடுத்தாராம்.. இதனால ரொம்பவே அதிர்ச்சியானது புதிய தலைவர்தானாம்.. வேலை பார்த்த ஊரில் ரெண்டு லட்சம் எப்ஐஆர் போட்டேன்னு உருட்டிய உருட்டே பெருசா இருக்கு.. இதில் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை கேட்கிறாரேன்னு புலம்புறாராம்.. என்றாலும் இந்த விவகாரத்தில் அவரோடு ஒத்துப்போகவில்லை என்றால் பதவிக்கு பங்கம் ஏற்பட்டுப்போகுமுன்னு பீதியில இருப்பதோடு, இவரை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடுவார் என்ற யோசனையில் இருக்காராம்.. இப்பவே அலர்ட்டா இருங்கன்னு ரெண்டாங்கட்ட தலைவர்கள் புதிய தலைவரிடம் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பூங்காவுக்குள் சட்ட விரோத செயல்கள் நடக்கிறதே…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் நகர மையத்தில் அமைந்துள்ள கோட்டை பூங்காவை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நகர மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அந்த பூங்காவை யார் எடுத்து நடத்துவது என்பதில் பெரும் குழப்பம் வெயிலூர் மாநகர நிர்வாகம், தொல்லியல்துறை மத்தியில் நிலவுகிறதாம். இதுவே தங்களுக்கு சாதகம் என்பது போல, பூங்காவுக்குள் ஒரு கும்பலே காட்டன் சூதாட்டத்தை காலை 11 மணி தொடங்கி இரவு வரை நடத்தி வருகிறதாம். இதுதவிர வழிப்பறி உட்பட குற்றச்சம்பவ ஆசாமிகளும் அந்த பூங்காவை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்களாம். பூங்காவை ஒட்டி செல்லும் சாலையில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு, பூங்காவுக்குள் தஞ்சமடைந்து விடுகிறார்களாம். இதற்கெல்லாம் காரணம், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்தானாம். இது காக்கிகளுக்கும் தெரியும் என்பதுதான் வேடிக்கை..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi