புதுடெல்லி: வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா 2023 குறித்து ஜூன் 5ம் தேதிக்குள் கருத்து மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,“ஒன்றிய அரசின் சார்பில் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா 2023 முன்மொழியப் பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கது கிடையாது. குறிப்பாக இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எனவே ஒன்றிய அரசின் அந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,” ஒன்றிய அரசின் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதில்,“வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா 2023க்கு கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கும் விவகாரத்தில் வரும் திங்கட்கிழமை அதாவது ஜூன் 5ம் தேதிக்குள் தமிழில் கருத்துக்களை தெரிவிப்பதற்கும், கேட்பதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்னதாக வழங்கிய இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்த ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை என்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை என்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.