காசா: காசாவிற்கு அனுப்பப்படும் உணவு பொருட்களை தீவிரவாதிகள் கொள்ளையடிக்கும் நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா மீது ஐ.நா குற்றச்சாட்டு கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசாவின் மீது 11 வாரங்களாக இஸ்ரேல் விதித்திருந்த போர் நிறுத்த அறிவிப்பை கடந்த மே மாத மத்தியில் நீக்கியது. இருப்பினும், உதவிப் பொருட்களை விநியோகிப்பதில் கடுமையான அரசியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சிறு குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கியுள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் விநியோகம் செய்யும் மனிதாபிமான உதவியை ராணுவமயமாக்கி, மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம், ஐ.நா. தலைமையிலான மனிதாபிமான உதவி விநியோகத்தை ஹமாஸ் அமைப்பு திருடுவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. இதனை ஹமாஸ் மறுத்துள்ளது.
காசாவின் மீதான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நீக்கி மூன்று வாரங்கள் ஆகியும், மிகக் குறைந்த அளவிலான கோதுமை மாவை மட்டுமே காசாவிற்குள் கொண்டு செல்ல முடிந்திருப்பதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. கெரெம் ஷாலோம் சோதனைச் சாவடி வழியாக இதுவரை 4,600 மெட்ரிக் டன் கோதுமை மாவு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபஹான் ஹக் கூறினார்.
காசாவிற்கு 8,000 முதல் 10,000 மெட்ரிக் டன் மாவு தேவைப்படுவதாக உதவி அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. ஆனால், அனுப்பப்பட்ட இந்த குறைந்தளவு மாவிலும் பெரும் பகுதி, அதன் சேருமிடங்களை அடைவதற்கு முன்பாகவே, பட்டினியால் வாடும் மக்களால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சில சமயங்களில் தீவிரவாத ஆயுதக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் ஃபஹான் ஹக் குறிப்பிட்டார்.
உலக உணவுத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, 4,600 மெட்ரிக் டன் மாவு என்பது காசாவின் 2 மில்லியன் மக்களுக்கு சுமார் எட்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும். எனவே, பலமுனை வழியாகவும், பல்வேறு பாதைகள் மூலமாகவும் அதிகளவிலான உதவிப் பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்க இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.