Wednesday, July 16, 2025
Home செய்திகள் மீனவர்களை வாழ விடுங்கள்

மீனவர்களை வாழ விடுங்கள்

by Ranjith

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்கை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதிக்கான டோக்கன் பெற்று 466 விசைபடகுகளில் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு சமீபகாலமாக மீன்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. மீன் பிடி தடைக்காலம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா என உள்ளிட்ட சில நிகழ்வுகள் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களிலும் மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுள்ளது. அங்கும் தேவையான அளவு மீன்கள் கிடைக்காவிட்டால், அவர்கள் நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி ரோந்து மேற்கொள்கிறோம் என்ற போர்வையில், தமிழக மீனவர்களை கைது செய்வதையே வேலையாக கொண்டுள்ளது. மீனவர்களை சிறைபிடிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர். விசைப்படகுகள் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடப்பதால், மீனவர்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டால் கூட, அடுத்து பிழைப்பிற்கு விசைப்படகுகளை கடன் பட்டு வாங்க வேண்டியதுள்ளது.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம், இலங்கை கடற்படையினர் ஏதோ தீவிரவாதியை கண்டதுபோல், அவர்களை விரட்டியடிக்கின்றனர். நல்ல மீன்களை பிடிக்கும் மீனவர்களை எல்கை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்து தமிழக அரசு எத்தனையோ முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலமும், நேரிலும் வலியுறுத்தியும் ஒன்றிய அரசு இப்பிரச்னையில் தலையிட மறுக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து வாடி வரும் நிலையில், அவர்களை மீட்கவும் உரிய நடவடிக்கை இல்லை.

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய அரசின் தூதரக வலுவான முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் சிறைப்படும்போது, அவர்களின் குடும்பமும் மாதக்கணக்கில் வறுமையின் பிடியில் தள்ளப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படினும், அவர்களது படகுகளை கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை சந்தித்து பேசி, அவர்களும் ஆறுதலும், அடிப்படை தேவைகளையும் அளித்திட தமிழ்நாட்டு மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தாலும், அதையும் இந்திய, இலங்கை அரசுகள் செவிமடுப்பதில்லை. தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே அடிக்கடி நடக்கும் எல்கை தகராறை தீர்த்து வைக்க, இந்திய, இலங்கை அரசுகள் ஏற்னவே அமைத்த கூட்டு பணிக்குழுவினை புதுப்பிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்காக இலங்கை அதிகாரிகளிடம் பேசி, தமிழக மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென முதல்வர் எழுதியுள்ள கடிதத்திற்கு ஒன்றிய அரசு செவி சாய்ப்பதே சிறந்ததாகும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi