சென்னை: சென்னையில் நேற்று நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் கேரளாவை 8-0 கோல் கணக்கில் தமிழகம் வெற்றி வாகை சூடியது. அகில இந்திய அளவில் மூத்த வீரர்களுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னையில் நேற்று மாலை தொடங்கியது. சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியின் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிஷா, கேரளா, சண்டீகர், பஞ்சாப், மகாராஷ்டிரா, மணிப்பூர், அரியானா, கர்நாடகா அணிகள் விளையாட உள்ளன. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா, கேரளா, பஞ்சாப் அணிகள் களமிறங்க உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள், ஜூன் 23ம் தேதி முடியும். தொடர்ந்து காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை நடைபெறும். இறுதி ஆட்டங்கள் ஜூன் 27ம் தேதி நடைபெறும்.
இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா ஆண்கள் அணிகள் நேற்று மோதின. அதிரடியாக விளையாடிய வி. ராமதாஸ், எஸ்.சுந்தரசேன் ஆகியோர் அடித்த கோல்களால் முதல் பாதியில் தமிழ்நாடு 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 2வது பாதியிலும் தாமரைக்கண்ணன், சதீஷ்குமார், ஏ.பி.வினோத்குமார், மெர்சிலின் டி குரூஸ், கேப்டன் ஆடம் ஆன்டனி, வி.ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 8-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புதுச்சேரி ஆண்கள் அணி 2-3 என்ற கோல்கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா 5-0 என்ற கோல் கணக்கில் இமாச்சலையும், கர்நாடகா 7-0 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின.