ஐதராபாத்தில் பரபரப்பு; தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது: விஷவாயு பீதியில் பொதுமக்கள் ஓட்டம்
திருமலை: ஐதராபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் விஷ வாயு பீதியில் தப்பி ஓடினர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் செருலோபல்லியில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ெதாழிற்சாலையில் நேற்றிரவு 20க்கும் ேமற்பட்ட தொழிலாளார்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையில் இருந்து உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.
தீ வேகமாக பரவியதால் தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரசாயன பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீ சுமார் 150 அடி உயரத்திற்கு மேல் கொழுந்துவிட்டு எரிந்தது. நெடியுடன் கூடிய புகை பரவியதால் அக்கம்பக்கத்தில் வசித்த பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விஷவாயு பரவியிருக்குமோ என பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐதராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


