புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் உள்ள செக்டார் 13 பகுதியில் பல மாடிகளை கொண்ட பெரிய குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று காலை 9வது தளத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ 7 மற்றும் 8வது தளங்களுக்கு பரவியது. இங்கு வசிப்பவர்கள் தீப்பற்றியதால் பதறிப்போய் குடியிருப்பை விட்டு வெளியேற தொடங்கினர். 8வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்த யாஷ் யாதவ் என்கிற தொழிலதிபரும், அவரது குடும்பத்தினரும், தீயணைப்பு வீரர்கள் வந்து தங்களை மீட்பதற்குள் தீயில் கருகி இறந்து விடுவோம் என்கிற பயத்தில் அங்கிருந்து கீழே குதித்தனர்.
யாஷ் யாதவ், அவரது மனைவி, அவர்களின் 12 வயது மகள், 10 வயது மகன் மற்றும் உறவுக்கார பெண் ஆகிய 5 பேரும் 8வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் அவர்கள் 5 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாஷ் யாதவ், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். யாஷ் யாதவின் மனைவியும், உறவுக்கார பெண்ணும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.