மதுரை: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதே TNPID சட்டத்தின் நோக்கம் என நியோமேக்ஸ் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நியோமேக்ஸ் வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.6,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிங்காரவேலன், பத்மநாபன், ராஜா, செல்வக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்கள் நிபந்தனைகளை மீறி நடந்துவருவதால் அவர்களது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கேட்டிருந்தார்.
அதேபோல நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக மதுரையை சேர்ந்த முத்துக்குமரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இதன் கிளை நிறுவனம் நெல்லை மற்றும் மதுரை பகுதியில் உள்ளது அதனை வழக்கில் இணைப்பது தொடர்பான உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம் இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவினர் இது போன்ற பிரச்சனைகள் தொடர்பாக புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதே TNPID சட்டத்தின் நோக்கம் என கூறியுள்ளார்.