சென்னை: தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி கடந்த 2021-22ம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனல், புனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு வகையில் மின் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர, ஒன்றிய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றுக்கு தமிழகத்தில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவை உள்ளது. இந்நிலையில், ஒன்றிய மின்சார ஆணையம் 2021-22ம் ஆண்டுக்கான நாட்டின் மின் உற்பத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தென்மாநிலங்களில் 33,712 கோடி யூனிட் மின்னுற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21ம் ஆண்டு 28,994 கோடி யூனிட்களாக இருந்தது. தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தி 2021-22ம் ஆண்டில் 5,691 கோடி யூனிட்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 5,237 கோடி யூனிட்களாக இருந்தது. அதன்படி தமிழகத்தில் மின் உற்பத்தி 8.68 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் மின் உற்பத்தி 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள், 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள், 516 மெகாவாட் திறனில் 4 எரிவாயு மின்நிலையங்கள் உள்ளன. மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு தினசரி 6,972 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தில் மொத்த மின் நிறுவு திறன் 34,706 மெகாவாட்டாக இருந்தது.
அனல்மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட்களும், நீர்மின் நிலையங்களில் ஒரு கோடி யூனிட்களும், எரிவாயு மின்நிலையங்களில் இருந்து 40 லட்சம் யூனிட்களும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர அரசு, தனியார் என ஒட்டுமொத்தமாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்கள் வாயிலாக சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 3,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரமும், 30 சதவீத காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.