Tuesday, June 24, 2025
Home செய்திகள்Banner News நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!!

நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!!

by Porselvi

மதுரை:நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான் என்று ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2023ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மதுரையை தலைமை இடமாக கொண்டு அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நான் உட்பட 60 ஆயிரம் பேர் மொத்தம் ரூ.1,000கோடிக்கும் மேல் முதலீடு செய்தோம். எங்கள் முதலீட்டுக்குரிய வட்டி மற்றும் முதிர்வுத் தொகை திரும்ப தரவில்லை. இது குறித்து மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் 2017ல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலீடு பணத்தை திரும்ப வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், அப்சல் நிறுவன மேலாளர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது.இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வரும் அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் ரூ.827 கோடி சொத்துகள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மூலம் ரூ.373 கோடி வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. ரூ.264 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ” 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi