சென்னை: தீபாவளி பண்டிகையன்று உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இனிப்புகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை எழும்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைை தாங்கினார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்.ராஜா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இனிப்பு, கார தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டது.
உணவு வணிகர்கள் தங்களது உணவு பாதுகாப்பு உரிமத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்தில் போதிய வெளிச்சம் இருக்கவேண்டும். சுவர்களில் கரி படிந்திருக்க கூடாது. பூச்சிகள், எலிகளின் நடமாட்டம் இருக்கக்கூடாது. பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்பு, கார வகைகளில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் 100 பி.பி.எம். அளவில் இருக்க வேண்டும். செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது. பணியாளர்கள் தங்கள் கைகளில் நகங்களுடன், சீருடை இல்லாமல் இருக்க கூடாது. கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் மீது உணவு பொருளின் விவரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி விவரங்கள் இருக்கவேண்டும்.
பால் பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுடன், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்களை சேர்த்து பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. தாள்கள், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் இனிப்புகள் தயாரிக்கலாம். ஆனால் சிலர் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து சீசனுக்காக ஆர்டர் எடுத்து இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அறிகிறோம். அவர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து தற்காலிக உரிமம் பெறலாம். அதை விடுத்து பாதுகாப்பின்றி, சுகாதாரமின்றி இனிப்பு – கார வகைகள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அரசின் அறிவுரைகளை மீறும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளோம். பொதுமக்கள் சந்தேகம் இருந்தால் ‘‘9444042322’’ என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு உங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்றனர்.