டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண்சிங் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் பயிற்சியாளர்கள் சிலருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பி கடந்த ஜனவரியில் வீராங்கனைகளுக்கு ஆதரவாக வீரர்களும் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர்.
பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண்சிங்கை உடனடியாக நீக்க வலியுறுத்தி வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பிரபலங்கள் போர் கோடி தூக்கினர். இதனால் விளையாட்டு துறையில் பெரும் பரபரப்பு உருவானது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், பாலியல் புகார் விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என கூறி மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் மீண்டும் பரபரப்பு தோன்றியுள்ளது. பிரிஜ் பூஷன் சரண்சிங் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மேரிகோம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி போலீஸ் தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.