புழல்: புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் 10வது தெரு ரங்கா அவென்யூ சந்திப்பு பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (57). மாதவரத்தில் டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்தார். 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்கள், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். செல்வராஜ் மனைவி மாலா. இதயா (16) என்ற மகள், சுமன்ராஜ் (15), கோகுல்ராஜ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுமன்ராஜ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பும், கோகுல்ராஜ் 8ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள மற்றொரு அறையில் விஷம் அருந்திய நிலையில் 2 மகன்களுடன் செல்வராஜ் தற்கொலை செய்துகொண்டனர்.
இன்று காலை பள்ளிக்கு செல்லவேண்டிய பிள்ளைகள் எழுந்தாததால் செல்வராஜ் மனைவி அறைக்கு சென்று பார்த்துள்ளார். உள் தாள்பாழ் போடப்பட்டு இருந்ததால் கதவை தட்டியுள்ளார். வெகுநேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு வாயில் நுரைதள்ளியபடி 3 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த தந்தை உள்ளிட்ட 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து செல்வராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.