Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை

ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை

by Arun Kumar

ராசிபுரம்: ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் புகுந்து 26.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற தந்தை, மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த நிவாஸ்-அகிலா ஆகியோரது திருமணம், கடந்த 6ம் தேதி முத்துக்காளிப்பட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 26.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மணப்பெண் வீட்டார் கொடுத்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தபோது, பைக்கில் சந்தேகத்தின்பேரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு முரணாக பதிலளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (55), அவரது மகன் ஹரிகிருஷ்ணன் என்பதும், ஊர் எல்லையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு, உறவினர்கள்போல் சென்று முகூர்த்த நேரத்தில் மணமகன் மற்றும் மணமகள் அறைகளில் நுழைந்து நகை, பணம், விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இவர்கள் ராசிபுரத்தில் நடந்த திருமணத்திலும் 26.5 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பழநியில் மொட்டை அடித்து கொண்டு வந்து, வழக்கம்போல் நடமாடி வந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று திண்டுக்கல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களிலும் இவர்கள் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi