Saturday, June 21, 2025
Home செய்திகள் விவசாய நில விபரங்களை சரிபார்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

விவசாய நில விபரங்களை சரிபார்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

by Porselvi

கடலூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபார்ப்பு செய்ய இம்மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளின் தரவுகள் மற்றும் நில உடைமைகள் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் வேளாண் மற்றும் அதுதொடர்பான துறை அலுவலர்கள், மகளிர் திட்டத்தின்கீழ் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநர்கள், பொது சேவை மையங்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களுடன் விவசாயிகள் விபரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசார் குறியீடு செய்த பதிவு விவரம் மற்றும் நில உடைமை வாரியாக மின்னணு பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக்குறியீடு எண் வழங்கப்படும்.

இந்தத் திட்டமானது ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்ட மானிய உதவிகள், பாரதப்பிரதமரின் விவசாய கெளரவ நிதி உதவித்தொகை. பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு, பயிர் சேத நிவாரணங்கள் போன்ற அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தள தனிக்குறியீடு எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன்மூலம் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.

விவசாயிகள் அரசுத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் அது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அரசின் நன்மைகள் மற்றும் மானியங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை இத்திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திட முடிகிறது. விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயி களின் வங்கிக் கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யப்படும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெற இயலும். விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற மானியங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

எனவே ஏப்ரல் 30ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் இதர ஆவணங்களைத் தங்களது கிராமங்களில் உள்ள சமுதாய வள பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பொது சேவை மையங்கள் அல்லது வேளாண்துறையின் மூலமாக நடத்தப்படும் முகாம்களுக்கு எடுத்துச் சென்று பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi