Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் மீண்டும் போராட்டம்?: அனைத்து எம்பிக்களையும் சந்திக்க முடிவு

புதுடெல்லி: வேளாண் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தொடங்க உள்ளதாக விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2020-21-ல் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைமையேற்று நடத்தியது. இதன் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

கடந்த 2021 டிசம்பர் 9ம் தேதி எங்கள் அமைப்புடன் ஒன்றிய அரசு செய்துகொண்ட ஒப்பந்தப்படி வேளாண் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தொடங்க பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எங்கள் கோரிக்கை பட்டியலை ஆகஸ்ட் 9ம் தேதி அனைத்து எம்பிக்களிடமும் வழங்குவோம். ‘வெள்ளையனே வெளியேறு’ தினத்தை ‘கார்ப்பரேட் நிறுவனங்களே வெளியேறு’ தினமாக கடைப்பிடித்து நாடு முழுவதும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.