சண்டிகர்: விவசாய சங்கத்தின் தலைவர் பால்தேவ் சிர்சாவுக்கு போராட்டம் நடந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபின் கானவுரியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டத்தில் விவசாய சங்கத்தின் தலைவர் பால்தேவ் சிர்சாவும் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் போராட்டக்களத்தில் இருந்தபோது நேற்று திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் பட்டியாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். மேலும் இதயக்கோளாறும் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.