*விலை வீழ்ச்சியால் வேதனை
திருப்பத்தூர் : திருப்பத்தூரில் கடும் விலை வீழ்ச்சியால், அறுவடை செய்யும் தக்காளியை கீழே கொட்டும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் பகுதிகளில் தற்போது தக்காளி அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை செய்ய கூலி ஆட்கள் மூலம் தக்காளி அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தக்காளியின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததால் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி 4 கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி பயிரிடப்பட்ட செலவு கூட விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிள் கூறுகையில், ‘நாங்கள் மூன்று மாத காலம் இந்த தக்காளியை பயிரிட்டு அதற்கு மருந்து உள்ளிட்டவைகளை தெளித்து தற்போது அறுவடைக்கு தயாரான காலத்தில், தக்காளியின் விலை கடும் வீழ்ச்சடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் அனைவரும் வேதனை அடைந்துள்ளோம். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தக்காளி அழுகிய நிலையில் அதிக அளவு காணப்படுகிறது.
கூலியாட்களுக்கு கூலி கூட கட்டுப்பாடியாகவில்லை. இதனால் தக்காளியை கீழே கொட்டும் சூழல் நிலவுகிறது. எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து எங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.