வடமதுரை: தேனி மாவட்டம், போடியில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து திருச்சி நோக்கி நேற்று சென்றது. பண்ணைப்புரத்தைச் சேர்ந்த விஜயன் (47) ஓட்டிச் சென்றார். ராஜேஷ் (45) நடத்துநராக இருந்தார். திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் பேருந்து சென்றபோது விஜயனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தை சாலையோரம் நிறுத்திய விஜயன், இருக்கையிலேயே மயக்கமடைந்து விட்டார். பயணிகள் அதிர்ச்சி அடைந்து கத்தினர்.
அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் (47), உடனடியாக பயணிகளை இறக்கி விட்டு, பேருந்தை ஓட்டிச் சென்று விஜயனை சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு, பேருந்தை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த விவசாயியை அனைவரும் பாராட்டினர்.