கோவை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கம் திட்டம் எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கோவையில் நேற்று அளித்த பேட்டி: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன். இதுதொடர்பாக டாஸ்மாக் துறையில் உள்ள 17 தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளேன். எங்கும் தவறு நடைபெறவில்லை. ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம், திமுகவை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே போய் சேரும் என கொச்சைப்படுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அவரது குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். இத்திட்டத்தில் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காமல், முழுமையாக நிறைவேற்றப்படும். எல்லா பயனாளிகளுக்கும் இந்த தொகை முறையாக, முழுமையாக வந்து சேரும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.