புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா குறித்தும், இந்திய ராணுவத்தை பற்றியும் தவறான, வெறுப்பூட்டும் மற்றும் மத ரீதியாக உணர்வுப்பூர்வ செய்திகளை பரப்பியதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானின் முக்கிய ஊடகமான டான் நியூஸ், சமா டிவி, ஜியோ நியூஸ் போன்றவையும் அடங்கும். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம், பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரவாதிகள் எனக் கூறாமல், போராளிகள் என செய்தியில் குறிப்பிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி இந்தியா தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு அனுப்பிய கடிதத்தில், பிபிசியின் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாவை பாகிஸ்தான் நிறுத்தியது என்ற பிபிசியின் செய்திக்கும் ஒன்றிய அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவத்தை நவீனமாக்க தினமும் ஒரு ரூபாய் வழங்குவது குறித்து வாட்ஸ் அப்பில் பரவி வரும் பணமோசடி தகவலையும் ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.