புதுக்கோட்டை: தமிழ்நாடு முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய புதுக்கோட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் நேற்று கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி அரசர்குளம் மேல்பாதியை சேர்ந்தவர் பழனியப்பன் (40). பாஜ உறுப்பினரான இவர், தனது முகநூல் கணக்கில் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து பதிவுகள் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் படத்தை அவதூறாக சித்தரித்து பதிவு போட்டுள்ளார். இதுதொடர்பாக அறந்தாங்கி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் சட்டப்பிரிவு 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பழனியப்பனை நேற்று கைது செய்தனர்.