Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பதவிக் காலம் நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை: ஐகோர்ட்டில் விஷால் பதில் மனு

சென்னை: பதவிக் காலம் நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் என்பது கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். தேர்தலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையராக நியமித்து நடத்த வேண்டும் என கூறி நடிகர் நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து இன்றைய தினம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் அந்த சங்கத்தின் சார்பாக பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணிகள் ரூ.25 கோடி செலவில் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும். தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 ஆண்டு வரை புதிய நிர்வாகிகளுக்கென்று தேர்தல் வேலை தொடங்கப்பட்டால் சங்கத்தின் நிர்வாக கட்டடம் அந்த பணிகளால் பாதிக்கப்படும் என்பதால் பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதை பதிவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக ரீதியில் பொதுக்குழு கூட்டப்பட்டு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அந்த ஆவணங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பதில் மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் இருதரப்பிலும் விரிவான வாதத்திற்காக இந்த வழக்கை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அந்த இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்பு இந்த வழக்கில் உரிய உத்தரவை நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.