Thursday, June 19, 2025
Home செய்திகள்Banner News ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Nithya

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு, கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக 27.7.2023 அன்று திருச்சிராப்பள்ளியில் “வேளாண் சங்கமம் – 2023” கண்காட்சியை திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியானது, உயர் விளைச்சல் தரவல்ல புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், வருமானத்தை பெருக்க வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள்,செயல் விளக்கங்கள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள், தொழில்நுட்பங்கள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன், பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டபலன் முன்பதிவுகள் போன்ற வேளாண்மை தொடர்புடைய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில் இன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள்,

உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய இரகங்களைப் பரவலாக்குதல், உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சேவைகள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.

இக்கண்காட்சியில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பபிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தி உள்ளனர்.

நுண்ணீர்ப்பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் பெருமளவில் பங்கு பெற்றுள்ள இந்த கண்காட்சியில் வேளாண் உற்பத்திக்குத் தேவையான பல்வேறு பயிர்களின் புதிய இரக விதைகள், காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளின் ஒட்டு இரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்ட உரக்கலவைகள், உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் நவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனையும் செய்யப்படுகின்றன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகள் போன்ற நிறுவனங்களும் தங்களது தரமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதுடன் விற்பனையும் செய்து வருகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், குறுவை சிறப்புத்தொகுப்புத் திட்டம், பாரம்பரிய நெல் இரகங்கள், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்,

பசுமைக்குடிலில் பெர்ரி பழவகைகள் சாகுபடி, இயற்கை வேளாண்மை, வேளாண் இயந்திரங்கள், உழவர் சந்தைகள், புவிசார்குறியீடு, மின்னணு தேசிய வேளாண் சந்தை, உயிர்ம வேளாண்மைக்கான இடுபொருட்கள் தயாரித்தல், புதிய கரும்பு இரகங்கள், ஆளில்லா வானூர்தி, பசுமைக்குடில், செங்குத்துத்தோட்டம் ஆகியவை குறித்த கண்காட்சி அரங்குகளும், உழவன் செயலி பதிவிறக்கம், அரசு நல உதவித்திட்டங்களில் பயன்பெறப் பதிவு செய்தல், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் அங்கேயே பயன்பெறவும் ஏதுவாக சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை இயந்திரமயமாக்குதலில் உள்ள சவால்களும், தீர்வுகளும், மண்வளம் காக்கும் உயிர்ம வேளாண்மை, காலநிலை மாற்றங்களைத் தாங்கவல்ல வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், உயர்விளைச்சல் கரும்பும் உன்னத பலன்களும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகள், வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், இடைத்தரகரில்லா வேளாண் சந்தை, மின்னணு சந்தை, நஞ்சில்லா வாழை, கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உற்பத்திக்கான பூச்சி நோய் மேலாண்மை, அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைப் பண்ணையம், மகத்துவ மஞ்சள் சாகுபடி, வளம் தரும் வாழை சாகுபடி,

தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல், வேளாண் காடுகள் மூலம் வருமானம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பம் போன்ற நவீன தலைப்புகளில் விஞ்ஞானிகள், அனுபவமிக்க வேளாண் பெருமக்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இக்கண்காட்சிக்கு உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குத் திருவிழாவில் வேளாண் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டு பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்து பார்வையிட்ட பின்னர் விழாப்பேருரை ஆற்றியதுடன், உழவர்களுக்கும் கண்காட்சியினை ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், உழவர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற கண்காட்சிகளைக் கண்டுணர்ந்து பயன்பெற வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப, சர்க்கரைத்துறை இயக்குநர் த.அன்பழகன், இ.ஆ.ப. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா,இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi