Sunday, June 22, 2025
Home செய்திகள் நுழைவுக்கட்டணம் அதிகரிப்பால் மலர் கண்காட்சியை காணாமல் தவிர்க்கும் உள்ளூர் பொதுமக்கள்

நுழைவுக்கட்டணம் அதிகரிப்பால் மலர் கண்காட்சியை காணாமல் தவிர்க்கும் உள்ளூர் பொதுமக்கள்

by Lakshmipathi

*கட்டணத்தை குறைக்க கோரிக்கை

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மலர் கண்காட்சியை காண செல்லாமல் தவிர்க்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக கடந்த ஆண்டு வரை பெரியவர்களுக்கு ரூ.50ம், சிறுவர்களுக்கு ரூ.30ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மலர் கண்காட்சியின் போது, திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டது. ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75ம் நுழைவு கட்டமாக வசூலிக்கப்பட்டது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரியவர்களுக்கு சற்று கட்டணம் குறைத்து ரூ.125 ஆக குறைக்கப்பட்டது. மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.125ம் சிறியவர்களுக்கு ரூ.75ம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பூங்கா நிர்வாகம் கட்டணத்தை குறைக்கவில்லை. தற்போதும் இதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் வரை வருகின்றனர். அங்கு கட்டணத்தை கேட்டவுடன் திரும்பி செல்கின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கட்டணத்தை கேட்டவுடன், திரும்பி சென்று விடுகின்றனர். மேலும், மலர் கண்காட்சியை காண வரும் உள்ளூர் மக்களும் இதே கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அறிந்த பல உள்ளூர் மக்கள் இம்முறையும் பலரும் மலர் கண்காட்சி காண வரவில்லை. ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் பல கோடி தோட்டக்கலைத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது.

இருந்த போதிலும், கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுவது சுற்றுலா பயணிகளை விட நீலகிரி மாவட்டத்தில் வாழும் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலர் கண்காட்சியை காண உள்ளூர் மக்களுக்கு கட்டணம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

எனவே, உள்ளூர் மக்கள் மலர் கண்காட்சியை குறைந்த கட்டணத்தில் கண்டு செல்ல ஏற்ற வகையில் கட்டணங்களை குறைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi