Thursday, July 10, 2025
Home செய்திகள் 25% கேளிக்கை வரி, 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுச்சேரியில் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அதிரடி முடிவு

25% கேளிக்கை வரி, 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுச்சேரியில் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அதிரடி முடிவு

by Suresh

புதுச்சேரி: புதுச்சேரியில் 25% கேளிக்கை வரி, 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைபடங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போதுவரை அமலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உள்ளாட்சித்துறை செயலரை அழைத்து நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்களை வெளியிட போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்துவிட்டனர். ஆனால் புதுச்சேரயில் 25 சதவீதம் என்பது ஏற்புடையது அல்ல. பல முறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதன்காரணமாகவே புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள் பல மூடபட்டு வருகிறது. 18 தியேட்டர்களுக்கு மேல் மூடிவிட்டார்கள். எனவே, தமிழகத்தை போல கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு குறைக்க வேண்டும். இது நியாயமான கோரிக்கை, இதனை அரசு செய்து தரும் என நம்புகிறோம். ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்கள் இல்லை என விநியோகிஸ்தர்கள் முடிவு செய்திருப்பது உண்மைதான். ஆனால் எந்த தேதி என தெரியாது’ என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi